முகநூலில் மாவீரர் தொடர்பான பதிவுக்காக இரு ஊடகவியலாளர்கள் பொலிசாரால் கைது!

முகநூலில் மாவீரர் தொடர்பான பதிவுக்காக இரு ஊடகவியலாளர்கள் பொலிசாரால் கைது!

முகநூலில் மாவீரர் நாள் தொடர்பாக பதிவுகளை இட்டதற்காக சக ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையினால் அவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் தேவ அதிரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணை இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்றும், இவர் விளக்கமறியலில் உள்ளார் என்;றும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. மற்றைய சக ஊடகவியலாளர் கிண்ணையடி வாழைச்சேனையை சேர்ந்தவர் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் விடுலைப்புலிகள், புலிகளின் தலைவர் போன்றோரது தகவல்களைப் பதிவிட்டமை, விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் செய்ய சமூக ஊடகங்களில் பதிவிட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிரன் தன் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இனம் மற்றும் மொழி வேறுபாடு காரணமாக இந்த முறைப்பாடு இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக இந்த முறைபாட்டை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

– ஊடகவியலாளர் தேவ அதிரன்

This post is also available in: English සිංහල