மணல் அகழ்வு குறித்தான செய்தி அறிக்கையிடலின் காரணமாக அச்சுறுத்தப்பட்டேன்!

மணல் அகழ்வு குறித்தான செய்தி அறிக்கையிடலின்
காரணமாக அச்சுறுத்தப்பட்டேன்!

திருகோணமலையில் அதிகரித்துவரும் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்தான செய்தி அறிக்கையிடல் காரணமாக அச்சுறுத்தலுக்குள்ளானதாக திருகோணமலையைச் சேர்ந்த அ. அச்சுதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதி, இலக்கம் 56ஐ வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் அச்சுதன் (42), 2019ம் ஆண்டு நிகழ்ந்த இந்த மனித உரிமை மீறல் தொலைபேசியினூடாக நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாகவும், உத்தியோகபூர்வமாகவும் மணல் அகழ்வு செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனை செய்தியாக அறிக்கையிட்ட போது மண் ஏற்றுபவர்களின் அச்சுறுத்தலுக்குள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பின்றி நடுநிலை ஊடகவியலாளராக தாம் ஊடகப்பணிகளில் ஈடுபடுவதே இந்த அச்சுறுத்தலுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூறும் அவர், சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.
மண் ஏற்றுமதியாளர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகார பலமும், பணபலமும் கொண்டவர்களாக உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் மௌனம் காக்கின்றனர் என்று அவர் கூறினார்.

இவ்வாறான ஊடகச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரமாக பணிகளை முன்னெடுக்கும் சூழல் உருவாக வேண்டும் என்று முறைப்பாட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.

-ஊடகவியலாளர் அச்சுதன் முறைப்பாடு

This post is also available in: English සිංහල