மோட்டார் சைக்கிளையும், பிணைப்பணத்தையும் மீளத் தாருங்கள்!

மோட்டார் சைக்கிளையும், பிணைப்பணத்தையும் மீளத் தாருங்கள்!

பிணைப்பணத்தையும் மோட்டார் சைக்கிளையும் மீளக்கையளிக்க பணிக்குமாறு ஊடகவியலாளர் சோலைமலை கேதீஸ்வரன் (43) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டினூடாக கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கடற்படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிணைப் பணத்தையும், கைது செய்யப்பட்ட போது கையகப்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீளப் பெறுவதற்கு உதவுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மன்னார், நானாட்டான், பள்ளங்கோட்டை முகவரியைச் சேர்ந்த இவர்.

கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி மன்னார் தாழ்வுப்பாடு பகுதியில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணையின் பின் அனுராதபுரம் புதிய மெகசின், வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் 2008ம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டு 2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது பிணைப் பணம் ஒரு லட்ச ரூபாவும், கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளும் இன்றுவரை திருப்பி தரப்படவில்லை என்று கேதீஸ்வரன் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார்.

பொலிஸ் மற்றும் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்திருக்கின்றார். தனக்குரிய பொருளும், பணமும் இதுவரை மீள கையளிக்கப்படாமை மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக உரியவர்களுக்கு பல முறை அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறினார்.

சந்தேகத்தின் பேரில் கைதாகி தான் இத்தனைக் காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தனது உடமைகளை உரிய வேளை கையளிக்காது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயற்படும் விதம் குறித்து தாம் பெரும் அதிருப்தியுற்றுள்ளதாகவும், இவற்றை உரியவாறு தன்னிடம் மீள ஒப்படைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இனம், அரசியற்கொள்கை மற்றும் மொழி வேறுபாடு ஆகியவற்றின் காரணமாக தனக்கு இந்த அநீதி நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடும் கேதீஸ்வரன், இந்த காரணங்களை முதன்மைப்படுத்தியே தனக்கு எதிராக இந்த மனித உரிமை மீறல் இடம்பெறுவதாகக் கூறினார்.

– ஊடகவியலாளர் சோலைமலை கேதீஸ்வரன்

This post is also available in: English සිංහල

More News