பொலிஸ் அறிக்கைகளை தமிழ், சிங்கள இருமொழிகளிலும் தாருங்கள்!

பொலிஸ் அறிக்கைகளை தமிழ், சிங்கள இருமொழிகளிலும் தாருங்கள்!

பொலிஸ் முறைப்பாடுகளின் போது பொலிஸ் அறிக்கைகள் சிங்கள மொழி மூலம் வழங்கப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக திருகோணமலை லிங்க நகரைச் சேர்ந்த ப.லோஜினி (42) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

லிங்க நகர், முதலாம் ஒழுங்கை, 14ஃ14ல் வசிக்கும் இவர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும், திருகோணமலை தலைமைப் பொலிஸ், நிலாவெளி, சீனக்குடா, உப்புவெளி ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் தினந்தோறும் நடைபெறுவதாகவும், நிர்வாகக் குறைபாடுகள் காரணமாகவும், மொழிப் பிரச்சினை காரணமாகவும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டை நிரூபணம் செய்வதற்கான ஆவணங்களாக பொலிஸ் அறிக்கைகளைக் குறிப்பிடும் அவர், முறைப்பாடுகள் செய்பவர்களின் மொழிக்கே அறிக்கைகள் வழங்கப்பட ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும், சிறந்த நிர்வாக முறையின் ஓர் அம்சமாக இரு மொழிகளிலும் அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு பரீட்சயமான மொழியில் பொலிஸ் அறிக்கைகளையோ, அரச ஆவணங்களையோ பெறுவது சகலரின் உரிமையாகும். இந்த உரிமைகள் இன்னும் மீறப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

– லிங்கநகர் லோஜினி வேண்டுகோள்

This post is also available in: English සිංහල