மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமை ஊடக சுதந்திர மீறலாகும்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காமை ஊடக சுதந்திர மீறலாகும்.

மாதாந்த கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமை ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் தொழில் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமையை மீறும் செயலாகும் என கண்டி மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருவதுடன், அதன் இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார மற்றும் ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் செயற்படுகின்றனர். கண்டி மாவட்ட பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வர்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும். பொது நிதியை அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தல், அதன் முன்னேற்றம், மோசடி, ஊழல் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் இந்த சந்திப்பு, ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கான முக்கிய ஆதாரமாக அமைவதால் அதனை மேற்பார்வை செய்வது வெகுசன ஊடகங்களின் செயற்பணியாக கருதப்படுகின்றது. ஆயினும் தற்போது இந்த சந்திப்பு தற்போது பத்திரிகையாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் கண்டி மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவப்பட்ட போது அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறித்த கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதனால் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.

இந்தப் பின்னணியில் குழுக் கூட்டத்தின் இறுதியில் அரசியல்வாதிகள் தமக்கு தேவையான சில கருத்துக்களை ஊடகவியலாளர்களுக்கு வழ்குவதுடன் அவை ஒருபோதும் மக்களுக்கு தேவையான விடயங்கள் அல்ல.

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்களின் ஊடக பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் கண்டி மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடகவியலாளர்கள், வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுமக்களுக்கு செய்திகளை கொண்டு செல்பவர்கள் அல்ல என்பதோடு, மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சேவை செய்பவர்கள் ஆவர். எனவே உள்நோக்கத்துடன் பொதுமக்களுக்கு தகவல்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளமை இதனுடாக தெளிவாகின்றது.

மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்களே தேர்ந்தெடுக்கின்றனர். அரச ஊழியர்களுக்கான செலவு பொது நிதியின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. குறிப்பாக ஒப்பந்தங்களை வழங்கும் நடவடிக்கைகளின் போது இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவையனைத்தையும் தடை செய்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையே இதனூடாக பறிக்கப்பட்டுள்ளது.

நிஹால் ஜயவர்தன, கண்டி

 

This post is also available in: English සිංහල