ஆறு தெருக்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறாமையினால் பிரதேசங்கள் பலவற்றிற்கு பாதிப்பு

ஆறு தெருக்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறாமையினால் பிரதேசங்கள் பலவற்றிற்கு பாதிப்பு

மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கம்புறுபிட்டிய பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள 06 கிராமிய வீதிகளுக்கு காபட் இட்டு செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவை இடைநடுவே கைவிடப்பட்டுள்ளமையினால் குறித்த வீதிகளின் ஊடாக பயணிக்கும் பிரதேச மக்கள் சுமார் ஒன்றரை வருட காலமாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. குறித்த ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட நிறுவனம் அதனை நிறைவு செய்வதற்கு போதிய நிதி வசதி இல்லா எனக் குறிப்பிட்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை இடை நடுவே இடைநிறுத்தியுள்ளது.

01.பொல்கஹமுல்ல – பெரகஹமுல்ல – நாரந்தெனிய வீதி 02. உள்ளல – மாஸ்முல்ல வீதி 03. லேனபட்டுவ – பிபிளவெல வீதி 04. பலொல்பிட்டிய – ஹதமுன வீதி 05. நாரந்தெனிய – பொரளுகெட்டிய வீதி 06. பரகஹதொட – பிபிலவெல போன்ற வீதிகளே இவ்வாறு 2020.02.10ஆம் திகதி மற்றும் அதற்கு அண்மித்த தினங்களில் காபட் இட்டு அபிவிருத்தி செய்தல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யட்டியன, உள்ளல, மாப்பலான, மாஸ்முல்ல, பிபுலவெல, விட்டியல, கம்உதாவ, மிரிஸ்வத்த, அத்துரலிய, லேனபட்டுவ, சப்புகொட, நாரந்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வீதிகளின் ஊடாக நாளாந்தம் பயணம் செய்வதுடன் அபிவிருத்தி நடவடிக்கைக்காக குறித்த வீதிகள் இடையிடையே உடைக்கப்பட்டுள்ளமை, வாய்க்கால்களை அமைப்பதற்காக தடிகள் அல்லது வேறு தூண்கள் நடப்பட்டுள்ளமை மற்றும் வீதிகளில் கற்கள் நிரப்பப்பட்டுள்ளமையினால் இந்த வீதிகளை உபயோகிக்கும் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

2020ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை செப்பனிடுவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வைபவ ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒப்பந்த நிறுவனம் தங்கல்லை நகரில் அமைந்துள்ளது. இந்த வீதிகளுள் ஒரு பிரதான வீதியான பலொல்பிட்டிய – ஹதமுன வீதி அக்குரெஸ்ஸவிலிருந்து தெற்கு அதிவேக வீதியின் இங்குருபத்வல நுழைவாயிலை இலகுவில் அடையக்கூடிய மாற்று வழியாகும். இதற்கு பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ அவர்களே அடிக்கல் நாட்டியுள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களாக இந்த நிலைமையினால் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசியல்வாதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் குறித்த ஒப்பந்த நிறுவனமானது கறுப்பு பட்டியலில் இடப்பட்டு வேறு ஒப்பந்த நிறுவனத்திற்கு குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆயினும் ஏதோவொரு காரணத்தினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாது காலந்தாழ்த்தப்பட்டு வருகின்றது.

 

This post is also available in: English සිංහල