உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுக்களை தாய்மொழியில் தாருங்கள்!

உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுக்களை தாய்மொழியில் தாருங்கள்!

தாய் மொழியில் தொடர்பாடல் நடைபெறாததாலும் பற்றுச்சீட்டுக்கள் தமிழ் மொழியில் வழங்கப்படாமையினாலும் பெரும் சிரமத்திற்குள்ளாவதாகவும், இதனால் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுவதாகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி டெனிஸ் பிரன்சன் தனது சகோதரியின் சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

கடந்த மார்ச் 14ம் திகதி, 2022 அன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸ் பிரிவு மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ள இவர், மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, சாஸ்திரியார் வீதி என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்டவர்.

கடந்த பெப்ரவரி மாதம் 10ம் திகதி தனது சகோதரி எதிர்கொண்ட சம்பவம் தொடர்பிலும், அரச வங்கியான மக்கள் வங்கியில் ஏற்பட்ட சிரமம் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள ரவி டெனிஸ், தனது முறைப்பாட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பின் காரணமாக பெரும் பிரச்சினைகளை வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள விடயம் பின்வருமாறு:
“மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் போது அதிவேகமாக வந்ததாகவும், தொலைபேசியில் கதைத்துக் கொண்டே வாகனம் ஒட்டியதாகவும் கூறி குற்றப்பதிவுச் சீட்டு ஒன்றை கையளிக்கப்பட்டது. ஆனால் அது சிங்கள மொழியில் மட்டும் எழுதப்பட்டிருந்ததாலும், சிங்கள மொழியில் குற்றம் பற்றி விளக்கப்படுத்தியதாலும் சரியான விளக்கம் இன்றி, எதற்கான தண்டப்பணம், எவ்வளவு தண்டப்பணம் என அறியாமலேயே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இங்கு மொழி சுதந்திரம் முற்றாகப் பாதிக்கப்பட்டதை உணரும்படி செய்தது.

அதேபோல மக்கள் வங்கி கிளையில் அடகு வைக்கும் பிரிவில் பணி புரியும் உத்தியோகத்தர் சிங்கள மொழியில் பேசக்கூடிய நபராக இருந்தமையினால் அந்த தொடர்பாடலிலும் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எமது சேவைகளை எமக்குரித்தான சொந்த மொழியில் பெற முடியாத நிலை காணப்பட்டது.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக வீதியிலும், வங்கியிலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், கண்கண்ட சாட்சிகளாக நண்பர்களையும், ஆவண சாட்சியாக தண்டனை குற்றப்பதிவுச் சீட்டு என்பனவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொழி உரிமை தொடர்பான இந்த பிரச்சினையை அனைவரும் சாதாரண விடயமாகவே எண்ணி செயற்படுகின்றனர். இதனால் பெரும் சிரமங்களின் மத்தியில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அர சேவைகளைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சேவைகளைப் பெறும் போது அது தொடர்பான எந்தவொரு படிவமோ, பற்றுச்சீட்டோ தமது தாய் மொழியில் பெறக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் போது அதனூடாக மக்கள் எந்தவிதமான சிரமங்களும் இன்றி சிறப்பான சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அரசு தமிழ் மொழி அமுலாக்கத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாடு முழுவதும் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதுடன், உரிய சேவைகளைப் பெற முடியாதுள்ளனர். இதனை உணர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், ஆகக்குறைந்த பட்சம் மக்களுக்கு வழங்கப்படும் படிவங்களையும், பற்றுச்சீட்டுக்களையும், ஆவணங்களையும் தாய்மொழிகளில் வழங்கவும் நடவடிக்கை எடுகு;கப்பட வேண்டும் என்பதே இந்த முறைப்பாட்டினூடாக அவர் முன்வைக்கும் பிரதான கோரிக்கையாகும்.
இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்று தனது முறைப்பாட்டினூடாக அவர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

– மட்டக்களப்பு ரவி டெனிஸ்

This post is also available in: English සිංහල