இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

இராணுவப் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதால் எனது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது!

இராணுவப்புலனாய்வார்கள் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த க. சதாசிவம் (80) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

புலனாய்வாளர்களின் இந்த செயலால் தன்னால் சுதந்திரமாக இயங்க இயலாமல் உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
மட்டக்களப்பு, தாமரைக்கேணி வீதி இல 9ஐச் சேர்ந்த இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த துன்புறுத்தலை தான் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:

“மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிக்கு சென்றாலும் இராணுவப்புலனாய்வாளர்கள் என்னைப் பின்தொடர்;ந்து வந்து புகைப்படம் எடுக்கின்றார்கள். இதனால் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதுடன், எனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது. இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன். சுதந்திரமாக நடமாடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது”. என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இனியும் இந்த துன்புறுத்தல் தொடரக் கூடாது என்றும், இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு சதாசிவம்

This post is also available in: English සිංහල

More News