கடமைக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸ் அதிகாரிகள்!

கடமைக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸ் அதிகாரிகள்!

யாழ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் (Pஊ 92646) ஒருவரினால் தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணன் (32) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

உரும்பிராய், உரும்பிராய் கிழக்கு, ஞானவைரவர் வீதி முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட சொர்ணலிங்கம் வர்ணன், இந்த சம்பவம் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் கடந்த பெப்ரவரி 21ம் திகதி, 2022 அன்ற நடைபெற்றதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த வேளை பொலிஸ் உத்தியோகத்தரால் இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், ஆளுநர் செயலக அதிகாரிகளின் உத்தரவின்றி ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர் முறையிட்டிருக்கின்றார்.

இந்த மனித உரிமை மீறலுக்கு நிர்வாகக் குறைபாடு என்று குறிப்பிடும் அவர், சம்பவம் தொடர்பாக கண்கண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியங்களாக தினக்குரல் பத்திரிகையையும், (துயககயெ ணுழநெ) என்ற சமூக ஊடகத்தையும் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களுடன் அலுவலகத்திற்குள் பிரவேகிக் முற்பட்ட வேளையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரியினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. அலுவகத்திற்குள் பிரவேசிக்க இடமளிக்காவிடின் இப்போராட்டத்திற்கு என்ன தீர்வு தருகின்றீர்கள் என்பதனை கேட்டறிந்து வருமாறு ஊடகவியலாளர்கள் அந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கேட்டிருந்தனர். இந்நிலையிலேயே அந்த பொலிஸ் உத்தியோகத்தர் இடையூறு செய்யும் வகையில் முற்று முழுதாக ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆளுநர் உதவிச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, தாம் அவ்வாறு பணிப்புரை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் முறைப்பாட்டில் ஊடகவியலாளர் வர்ணன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் வர்ணன் இச்சம்பவம் தொடர்பாக முறையிடக் காரணம் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளாகும். அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை செய்வதற்கு அனுமதி அளித்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த இதர அதிகாரிகளும் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களாக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போருக்கு பின்னரான சூழலில் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னம் காரணமாக ஊடக செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத இக்கட்டான நெருக்கடி மிக்க சூழலே அங்கு காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் அவரால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு இச்சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
பாதுகாப்பு தரப்பினர் சகோதர மொழி பேசுபவர்களாக இருந்தாலும், தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இந்த பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் என்பது தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

This post is also available in: English සිංහල